Tuesday, November 4, 2014

பட்டினத்தார் பாடல் (உடல் நிலையாமை)

ஒரு மடமாது மொருவனுமாகி
இன்ப சுகந்தரு மன்பு பொருந்தி
யுணர்வு கலங்க வொழுகிய விந்து
வூறுசுரோணித மீதுகலந்து

பனியிலொர்பாதி சிறுதுளிமாது
பண்டியில்வந்து புகுந்து திரண்டு
பதுமவரும்பு கமடமிதென்று
பார்வை மெய்வாய் செவிகால் கைகளென்ற

உருவமுமாகி யுயிர்வளர் மாத
மொன்பது மொன்று நிறைந்து மடந்தை
யுதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளுமறிந்து

மகளிர்கள் சேனை தரவணையாடை
மண்படவுந்தியு தைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை யமுதமருந்தி
யோரறிவீரறி வாகிவளர்ந்து

 ஒளிநகையூற லிதழ்மடவாரு
வந்துமுகந்திட வந்துதவழ்ந்து
மடி யிலிருந்து மழலை பொழிந்து
வாவிருபோவென நாமம் விளம்ப

உடைமணியாடை யரைவடமாட
வுண்பவர் தின்பவர் தங்களொடுண்டு
தெருவிலிருந்து புழுதியளைந்து
தேடியபாலரொ டோடி நடந்து

அஞ்சு வயதாகி விளையாடியே
உயர்தரு ஞான குருவுபதேச
முத்தமிழின்கலை யுங்கரைகண்டு
வளர்பிறையென்று பலரும் விளம்ப

வாழ்பதினாறு பிராயமும் வந்து
மயிர்முடிகோதி மறுபதநீல
வண்டிமிர் தண்டொடை கொண்டை புனைந்து
மணிபொன் இலங்கு பணிகளணிந்து

மாகதர் போகதர் கூடிவணங்க
மதன சொரூப னிவனென மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழிகொண்டு சுழியவெறிந்து

மாமயில் போலவர் போவதுகண்டு
மனது பொறாம லவர்பிறகோடி
மங்கல செங்கல சந்திகழ்கொங்கை
மருவமயங்கி யிதழமுதுண்டு

தேடியமாமுதல் சேரவழங்கி
ஒருமுதலாகி முதுபொருளாயி
ருந்த தனங்களும் வம்பிலிழந்து
மதனசுகந்த வித்னமிதென்று

வாலிப கோலமும் வேறுபிரிந்து
வளமையுமாறி யிளமையுமாறி
வன்பல்விழுந்திரு கண்களிருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து

 வாதவிரோத குரோதமடைந்து
செங்கை யினிலோர் தடியுமாகியே
வருவதுபோவ தொருமுதுகூனு
மந்தியெனும்படி குந்திநடந்து

மதியுமிழந்து செவிதிமிர் வந்து
வாயறியாமல் விடாமன்மொழிந்து
துயில்வருநேர மிருமல்பொறாது
தொண்டையு நெஞ்சமு முலர்ந்து வறண்டு

துகிலுமிழந்து சுணையுமிழந்து
தோகையர் பாலர்கள் கோரணிகண்டு
கலியுகமீதி லிவர்மரியாதை
கண்டிடுமென்பவர் சஞ்சலமிஞ்ச

கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து
தெளிவுமிராம லுரைதடுமாறி
சிந்தயு நெஞ்சமு முலைந்துமருண்டு
  
திடமுமுலைந்து மிகவுமலைந்து
தேறிநலாதர வேதென நொந்து
மறையவன்வேத னெழுதியவாறு
வந்ததுகண்டமு மென்று தெளிந்து

இனியெனக் கண்ட மினியெதொந்த
மேதினவாழ்வு நிலாதினி நின்ற
கடன்முறை பேசு மெனவுரை நாவு
றங்கி விழுந்துகை கொண்டு மொழிந்து

கடைவழி கஞ்சி யொழுகிடவந்து
பூதமு நாலுசு வாசமு நின்று
நெஞ்சு தடுமாறி வருநேரமே
வளர்பிறைபோல வெயிறுமுரோம

முஞ்சடையுஞ் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனதுமிருண்ட வடிவுமிலங்க
மாமலைபோல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி யுயிர் கொடுபோக
  
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கின ரேயிவர் காலமறிந்து
பழையவர் காணு மெனுமயலார்கள்

பஞ்சு பறந்திட நின்றவர்பந்த
ரிடுமெனவந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியுமென்று
பலரையுமேவி முதியவர் தாமி

ருந்தசவங்கழு வுஞ்சிலரென்று
பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறுமுடம்பை
வரிசை கெடாம லெடுமெனவோடி

வந்திள் மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை யடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிடமூடி யழல்கொடு போட

 வெந்து விழுந்துமு றிந்து நிணங்க
ளுருகி யெலும்பு கருகி யடங்கி
யோர்பிடி நீறுமிலாத வுடம்பை

நம்புமடி யேனை யினியாளுமே